×

துப்பாக்கி முனையில் தொழிலதிபரிடம் ரூ.18 கோடிக்கு கட்டப்பஞ்சாயத்து செய்த பாஜ முன்னாள் மாநில நிர்வாகி மிளகாய்பொடி வெங்கடேசன் அதிரடி கைது: நிலமோசடி வழக்கிலும் சிக்கினார்

சென்னை: ரூ.18 கோடி கட்டப்பஞ்சாயத்து பேச்சுவார்த்தையின்போது தொழிலதிபர் நெற்றியில் துப்பாக்கி வைத்து மிரட்டிய வழக்கில், செம்மர கடத்தல் மன்னனும், பாஜ முன்னாள் மாநில நிர்வாகியுமான ‘மிளகாய்பொடி’ வெங்கடேசன் மற்றும் அவரது கூட்டாளிகளை செங்குன்றம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து உரிமம் இல்லாத 3 கள்ளத்துப்பாக்கிகள், தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை பாடியநல்லூரை சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேசன் (எ) மிளகாய்பொடி வெங்கடேசன். நிழல் உலக தாதாவான இவர் மீது ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் 53 செம்மர கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆந்திராவில் மட்டும் 40 வழக்குகள் உள்ளன.

தன்னை ஆந்திர போலீசார் கைது செய்வதை அறிந்த வெங்கடேன் தன்னை பாதுகாத்து கொள்ள பாஜ முக்கிய நிர்வாகி ஒருவர் மூலம் அக்கட்சியில் இணைந்தார். அடுத்த சில நாட்களில் அவர், பாஜவுக்கு ரூ.50 லட்சம் கட்சி நிதியாக வழங்கினாராம். இதையடுத்து, தமிழக பாஜ தலைமை, மிளகாய்பொடி வெங்கடேசனுக்கு பிற்படுத்தப்பட்டோர் மாநில செயலாளர் பதவி வழங்கியது. அந்த பதவியை வைத்து பலரிடம் ஒன்றிய அரசில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றினார். இந்நிலையில், ஆந்திர போலீசார் செம்மர கடத்தல் வழக்கில் மிளகாய்பொடி வெங்கடேசனை கைது செய்தனர். அதைதொடர்ந்து கட்சி பதவியில் இருந்து நீக்கினாலும், அவர் பாஜவில் உறுப்பினராக உள்ளார்.

இப்போது ஜாமீனில் உள்ளார். இதற்கிடையில், தொழிலதிபர் கண்ணன் மற்றும் அவரது நண்பரான திருவள்ளூர் மாவட்ட அதிமுக இணை செயலாளராக உள்ள சீனிவாசன் ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்கள் செய்து வந்தனர். இதில் சீனிவாசன், தொழிலதிபர் கண்ணனின் ரூ.18 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மிளகாய்பொடி வெங்கடேசன் கவனத்துக்கு தொழிலதிபர் கண்ணன் கொண்டு சென்றார். சில நாட்களுக்கு முன்பு, மிளகாய்பொடி வெங்கடேசன் முன்னிலையில் தொழிலதிபர் கண்ணன் மற்றும் அவரது தொழில் பார்ட்னரான சீனிவாசனிடம் பஞ்சாயத்து நடந்தது.

அப்போது மிளகாய்பொடி வெங்கடேசன் சீனிவாசனிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து ரூ.5 கோடியை கொடுக்கும்படி கூறியுள்ளார். அவரும் தருவதாக உறுதி அளித்தார். இதையடுத்து ரூ.5 கோடி பணம் கிடைத்ததும் அதில் ரூ.1 கோடி கமிஷனாக தொழிலதிபர் கண்ணன், மிளகாய்பொடி வெங்கடேசனுக்கு தருவதாக உறுதியளித்தார். ஆனால் சீனிவாசன் சொன்னபடி பணம் கொடுக்காமல் மிரட்டினார். இதை கண்ணன், மிளகாய்பொடி வெங்கடேசன் கவனத்துக்கு கொண்டுபோனார். அப்போது மிளகாய்பொடி வெங்கடேசன், சீனிவாசனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, கண்ணனுக்கு தரவேண்டிய பணத்தை நாம் இருவரும் பிரித்துக் கொள்ளலாம்.

கண்ணனை நீங்கள் மிரட்டினால் அவன் பயத்தில் ஓடிவிடுவான் என்று சீனிவாசன் ஆலோசனை கொடுத்துள்ளார். இதையடுத்து மிளகாய்பொடி வெங்கடேசன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் தொழிலதிபர் கண்ணனை அவரது இடத்திற்கு சென்று பேசினர். அப்போது மிளகாய்பொடி வெங்கடேசன், சீனிவாசனுக்கு ஆதரவாக பேசினாராம். இதனால் தொழிலதிபர் கண்ணனுக்கும் மிளகாய்பொடி வெங்கடேசனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் மிளகாய்பொடி வெங்கடேசன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் தொழிலதிபர் கண்ணனின் நெற்றியில் துப்பாக்கிகளை வைத்து, இனி பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத தொழிலதிபர் கண்ணன், உயிர் பிழைத்தால் போதும் என அங்கிருந்து இருந்து தப்பி வந்துள்ளார். பின்னர் இது குறித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் தொழிலதிபர் கண்ணன் புகார் அளித்தார். வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், ஆவடி மாநகர காவல் ஆணையராக அருண் பதவியேற்ற பிறகு, தொழிலதிபர் கண்ணன் இதுதொடர்பாக உரிய ஆதாரங்களுடன் மீண்டும் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க செங்குன்றம் போலீசாருக்கு ஆவடி கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.

அதேநேரம், சென்னை மண்ணடி மூர் தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுல்தான்(52) என்பவர் ஆவடி மாநகர ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக பாஜ பிரமுகராக உள்ள மிளகாய்பொடி வெங்கடேசன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பாஜ செயலாளர் நரேஷ்(38) மற்றும் நரேஷின் தந்தை பிரதீப்குமார்(63) ஆகியோர் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்க ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். இதையடுத்து பாஜ முன்னாள் மாநில நிர்வாகி மிளகாய்பொடி வெங்கடேசன் மீது 2 வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் வழக்குகளின் அடிப்படையில், மிளகாய்பொடி வெங்கடேசனை கைது செய்ய அவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் போலீசார் சென்றனர். வெங்கடேசன் வீட்டை பார்த்து அதிசயித்தனர். காரணம், வீடு முழுவதும் நட்சத்திர ஓட்டலுக்கு இணையான அலங்கார வேலைபாட்டுடன் கட்டப்ப்பட்டிருந்தது. அதைதொடர்ந்து செங்குன்றம் போலீசார், தொழிலதிபர் கண்ணன் நெற்றியில் துப்பாக்கி வைத்து மிரட்டிய வழக்கு தொடர்பாக வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது மிளகாய்பொடி வெங்கடேசன் தனது படுக்கை அறையில் உரிமம் இல்லாத 2 துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

உடனே துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்து மிளகாய்பொடி வெங்கடேசனை கைது செய்தனர். அதேபோல் துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் அதிமுக இணை செயலாளராக உள்ள சீனிவாசனை கைது செய்து, அவரது வீட்டில் இருந்து கள்ளத்துப்பாக்கி ஒன்று மற்றும் தோட்டாவை பறிமுதல் செய்தனர். ரியல் எஸ்டேட் அதிபர் சுல்தான் கொடுத்த வழக்கிலும் பாஜ முன்னாள் மாநில நிர்வாகியான மிளகாய்பொடி வெங்கடேசனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த மோசடிக்கு துணையாக இருந்த திருவள்ளூர் மாவட்ட பாஜ செயலாளர் நரேஷ் மற்றும் நரேஷின் தந்தை பிரதீப்குமார் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

The post துப்பாக்கி முனையில் தொழிலதிபரிடம் ரூ.18 கோடிக்கு கட்டப்பஞ்சாயத்து செய்த பாஜ முன்னாள் மாநில நிர்வாகி மிளகாய்பொடி வெங்கடேசன் அதிரடி கைது: நிலமோசடி வழக்கிலும் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Milakaipodi Venkatesan ,Chennai ,Katta Panchayat ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...